திருஞானசம்பந்த சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள்
1. மூன்றாம் வயதிலே உமாதேவியார் கறந்து பொற்கிண்ணத்தில்
ஊட்டிய திருமுலைப்பாலை உண்டு 'தோடுடைய செவியன்' என்ற
திருப்பதிகம் பாடியது.
2. சிவபெருமான் இடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும்,
முத்துச் சின்னமும், முத்துப்பந்தரும், உலவாக் கிழியும் பெற்றது.
3. 'காரைகள் கூகை முல்லை' என்ற திருப்பதிகத்தைப் பாடிப் பாலை
நிலத்தை நெய்தல் நிலமாக ஆக்கியது.
4. கொல்லிமழவன் என்ற மனன்னின் மகளுக்கு இருந்த முயலகன் என்ற
கொடிய நோயை 'துணிவளர் திங்கள்' என்ற பதிகம்பாடி அகற்றியது.
5. அடியார்களுக்கு கடுங்குளிரால் ஏற்பட்ட 'பனி' என்னும் குளிர் சுரத்தை
'அவ்வினைக்கு இவ்வினையாம்' என்ற திருநீலகண்டப் பதிகம் பாடி
அகற்றியது.
6. பாம்பு தீண்டி இறந்த வணிகனை 'சடையா யெனுமால்' என்னும்
பதிகம் பாடி உயிர் பெற்றெழச் செய்தது.
7. சிவபெருமான் இடத்திலே 'வாசி தீரவே, காசு நல்குவீர்' என்ற பதிகம்
பாடி வாசியில்லா படிக்காசு பெற்றது.
8. வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசர்
சுவாமிகள் 'பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ' என்ற பதிகம்
பாடி திறந்த திருக்கதவை 'சதுரம் மறைதான்' என்ற திருப்பதிகம்
பாடி அடைப்பித்தது.
9. 'மந்திரமாவது நீறு' என்ற திருப்பதிகம் பாடி பாண்டிய மன்னனுக்குக்
கூனையும், சுரத்தையும் போக்கியது.
10. அனல் வாதத்தின்போது சமணர்கள் எதிரே 'போகமார்த்த
பூண்முலையாள்' என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை அனலில் போட்டுப்
பச்சையாக எடுத்தது.
8. புனல் வாதத்தின்போது சமணர்கள் எதிரே 'வாழ்க அந்தணர்' என்ற
திருப்பாசுர ஏட்டினை வைகையாற்றிலே போட்டு, அவ்வேடு எதிர்
செல்லுமாறு செய்தது.
9. புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.
10. வெள்ளம் பெருகிய ஆற்றில் தாமும், அடியார்களும் ஏறிய
ஓடத்தைக் கோலின்றிச் செல்ல 'கொட்ட மேகமழுங் கொள்ளம்
பூதூர்' என்ற பதிகம் பாடி கரை சேர்த்தது.
11. 'பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி' என்ற பதிகம் பாடி ஆண்
பனைகளை பெண் பனைகளாக்கியது.
13. விஷத்தினால் இறந்து எரியூட்டப்பட்ட பூம்பாவை என்ற பெண்ணின்
எலும்பைப் பதிகம் பாடி மீண்டும் பெண் ஆக்கியது.
14. தமது திருக்கல்யாணத்தைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரையும்
'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயத் திருப்பதிகம் ஓதித்
தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment