3. தீராத வயிற்று நோய் தீர்க்கும் பதிகம்
(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)
பண்- கொல்லி 4-ம் திருமுறை
திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் பிறந்தவரா யிருந்தும்
நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம்
சேர்ந்து, தருமசேனர் என்ற பெயருடன் அச் சமயத்தில் தலைசிறந்து
விளங்கினார். அவரது தமக்கையாராகிய திலகவதியார் தமபியாரைப்
பரசமயப் படுகுழியினின்றும் கரையேற்ற வேண்டும் எனப் பரமனைப்
பல்லாற்றாலும் துதித்து வேண்டினார். திருவதிகை வீரட்டானேசுவரரும்
திலகவதியாருக்கு இரங்கி கனவில் தோன்றித் தம்பியாரைச் சூலை
மடுத்து ஆள்வோம் எனக் கூறியருளி, அவ்வண்ணமே தருமசேனரைச்
சூலை நோய் சென்றடையுமாறு அருள, அதுவும் கடுங்கனல்,
கொடுவிடம், வச்சிரம் மற்றும் கொடிய அனைத்தும் ஒன்று சேர்ந்தது
போல அவரது வயிற்றையடைந்து குடரினை முடக்கிக் பெருந்
துன்பத்தை விளைவித்தது. அக்கொடிய சூலையைப் போக்க இயலாது
சமணர்கள் கைவிட்டனர். பின்னர் இறைவர் திருவருள் கூடியமையால்
தருமசேனர் திருவதிகை சென்று தமக்கையாரைச் சரணடைந்தார்.
திலகவதியாரும், தம்பிக்கு ஐந்தெழுத்தோதித் திருநீறு அளித்தார்.